tamilnadu

img

அவர்கள்தான் தேசம்....!

கரத்தாலும்,  கருத்தாலும் உழைக்கக் கூடிய அனைத்து தொழிற்சங்க அமைப்புக்களும், இமயம் முதல் குமரி வரை எல்லா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து , வரும் நவம்பர் 26 ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நாட்டின் மக்கள் தொகையில் விவசாயிகளும், தொழிலாளர்களும்தான் 90 சதவீதத்திற்கும் மேல். அவர்கள்இன்றி அணுவும் அசையாது. நாட்டின் நாடி நரம்பாக,ரத்தமும் சதையுமாக உள்ள விவசாயிகள் - தொழிலாளர்கள் மீது, கொடூரமான தாக்குதலை மத்திய அரசு தொடுத்துள்ளது. அந்தத் தாக்குதலை முறியடிக்கத்தான் வேலைநிறுத்தப் போராட்டம்.இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் விவசாயத்தின் பங்கு 16% என்றபோதிலும், நாட்டு மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருடைய வாழ்வாதாரமாக விவசாயமே உள்ளது. இதனால்தான் இந்தியா கிராமங்களில் வாழ்கிறதுஎன அண்ணல் காந்தி குறிப்பிட்டார். தொழில் துறையிலும், சேவைத்துறையிலும் பணியாற்றுவோர் இதர பகுதியினர்.

தொழிலாளர் இல்லையேல்...
முதலாளிகள்தான் ‘செல்வ உற்பத்தியாளர்கள்’ என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டு பேசியிருந்தார். ஆனால் உண்மையில், தொழிலாளர்கள் இல்லாமல், தொழிலும் இல்லை, செல்வ வளங்களின் உருவாக்கமும் இல்லை என்பதை கொரோனா - ஊரடங்கு காலம் கண்கூடாக காட்டிவிட்டது. அரசின் புள்ளிவிபரங்களின் படியே இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி 23.9 சதவீதம். அடுத்த காலாண்டில் வீழ்ச்சி  8.9 சதவீதம். உழைப்பாளி மக்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்ட இந்தக் காலத்தில், நாட்டிற்கு செல்வ உருவாக்கம் நடக்கவில்லை என்பதை கண்கூடாக அறிந்தோம். மூலதனம் இருந்தும், கருவிகள் இருந்தும், முதலாளிகள் இருந்தும் ஆலைகள் இயங்கவில்லை. ஏனென்றால், தொழிலாளர்கள் வர இயலவில்லை. உழைக்கும் மக்களே செல்வ வளங்களை உருவாக்குகிறார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

ஆனால், மோடி அரசு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை, பெருமுதலாளிகளுக்காக மட்டுமே அறிவித்து வருகிறது. தொழிலாளர்கள் மீது அடுத்தடுத்த தாக்குதல்களை மட்டுமே முன்னெடுக்கிறது. அதன் உச்சமாக, 29 தொழிலாளர் நலச் சட்டங்களை வெட்டிச்சுருக்கி, 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றியமைத்துள்ளார்கள். தொழிலாளர்களின் வாழ்க்கையில் வேலைப் பாதுகாப்புதான் முதன்மையானது, வாழ்க்கைக்கு அச்சாணி. அதையே பறிக்கும் விதமாக புதிய சட்டங்கள் அமைகின்றன. 100 க்கும் குறைவான தொழிலாளர்கள் பணியாற்றும் ஆலையை மூடுவதற்கும், ஆட்குறைப்புச் செய்யவும் அரசின் அனுமதி தேவையில்லை என்ற பழைய சட்டத்தை திருத்தி, 300 தொழிலாளர்கள் வரைபணியாற்றும் ஆலைகளை மூட அனுமதி தேவையில்லை என்றாக்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் 80 சதவீதம், 300க்கும் குறைவான தொழிலாளர்களையே கொண்டுள்ளன. நாட்டின் பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு வேலைப் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளது. வேலையில் சேர்ப்பதும், வெளியேற்றுவதும் முதலாளிகளின் உரிமையாக மாற்றப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் வேலை உரிமையை பறித்து,வேலை நீக்கம் செய்வது முதலாளிகளுக்கு உரிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்த உரிமை பறிக்கப்பட்டு, சட்ட விரோதம் ஆக்கப்பட்டுள்ளது.  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்துச் செய்வதும் தொழிற்சங்க தலைவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதும் சட்டமாக்கப்பட்டுள்ளன.

‘கட்டிய கோவணத்துடன்...’
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பி அண்ட் சி ஆலையில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமையேற்றதற்காக சர்க்கரைச் செட்டியார் மீது ஆலை நிர்வாகம் வழக்கு போட்டது. ஆலைக்கு ஆதரவாக தீர்ப்புச் சொன்ன நீதிமன்றம், நட்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் சொன்னது. சர்க்கரைச் செட்டியார் இந்த தீர்ப்புக்குஎதிராக வாதாடினார். “வாரம் ரூ.10 சம்பாதித்து நான்வாழ்க்கை நடத்திவருகிறேன். உடுத்தியுள்ள  ஆடைகளும், மாற்று ஆடைகளுமே என் சொத்தாகும். இதைவேண்டுமானாலும் ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கொடுக்கலாம். அப்படி செய்தாலும் கட்டிய கோவணத்துடன் தொடர்ந்து போராடுவேன்” என்று கூறினார். இப்படி தொடர் போராட்டங்களின் விளைவாக 1926 ஆம் ஆண்டில் இந்திய தொழிற்சங்க சட்டம் உருவானது. ஆங்கிலேயர் ஆட்சிக்  காலத்திலேயே தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் மோடி ஆட்சி, அந்த உரிமையை பறிக்க சட்டம் இயற்றுகிறது.இதுபோல, இந்திய விடுதலைக்கு முன்னும், விடுதலைக்குப் பிறகும் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற பல உரிமைகளை இந்தச் சட்டங்கள் பறிக்கின்றன. ஏற்கனவே பாஜக ஆளும் பல மாநிலங்களில் வேலை நேரம் 12 மணி நேரமாக்கப்பட்டதுடன், 3 ஆண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டன. உழைக்கும் மக்களை கொத்தடிமைச் சுரண்டலில் தள்ளுவதே மோடி அரசின் நோக்கமாக உள்ளது.

வேளாண் சட்டங்கள்...
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் 2 வேளாண் சட்டங்களும், ஒரு வேளாண் சட்ட திருத்தமும் நாடாளுமன்றவிதிகளை மீறி, மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவேற்றப்பட்டன.ஒப்பந்த விவசாயம், நாட்டில் ஏற்கனவே வேறு வடிவத்தில் அமலில் உள்ளது. கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்கள் கரும்பு சாகுபடியை அரசு மற்றும் தனியார் ஆலையில் பதிவு செய்து, விளைவித்து ஆலைகளுக்கு தருகின்றனர். அரசு ஆலைகளும், தனியார் ஆலைகளும் முறையாக அதற்கான தொகையை வழங்குவதில்லை. நாடாளுமன்றத்தில் அமைச்சர் கொடுத்த தகவல்களின்படி ரூ. 15 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளன கரும்பு ஆலைகள். மாநில அரசுகளும், மத்திய அரசும், சர்க்கரை ஆலை நிர்வாகங்களை நிர்ப்பந்தப்படுத்தி இந்ததொகையை விவசாயிகளிடம் சேர்க்க முடியவில்லை. ஏற்கனவே இதுதான் நிலைமை என்கிறபோது, கார்ப்பரேட் கம்பெனிகள் ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி செய்தால், ஏற்றுக்கொண்ட தொகையை விவசாயிகளுக்கு தருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நாளடைவில் குறைந்தபட்ச ஆதார விலையும் கைவிடப்படும். கொள்முதலுக்கு உத்தரவாதம் இருக்காது. இறுதியில் தங்களது சொந்த நிலத்திலிருந்தே விவசாயிகள் வெளியேற்றப்படுவார்கள். அந்நியப்படுவார்கள்.

பதுக்கல் பேர்வழிகளுக்கு லாபம்
சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் பெரம்பலூரில் பல ஆயிரம் டன் பெரிய வெங்காயம் பதுக்கிவைக்கப்பட்டு, கண்டறியப்பட்ட செய்தி வெளியானது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. ஏற்கனவே நடப்பில் இருந்துவந்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டப்படி, பதுக்கல் சட்ட விரோதமானது. பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மோடி அரசு செய்திருக்கும் சட்டத்திருத்தங்கள், பதுக்கலை ஊக்கப்படுத்துகின்றன. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்வதை மாற்றி, பெரு முதலாளிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதும், பதுக்கல் நியாயப்படுத்தப்படுவதும், நாளடைவில் கொள்முதலை அழித்துவிடும். மொத்தத்தில் சாகுபடி, கொள்முதல், வணிகம் ஆகிய மூன்றுமே கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பிடிக்குச் செல்லும். வேளாண் சட்டங்களின் ஆபத்தான விளைவுகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியமூன்று தரப்பையுமே கடுமையாக பாதிக்கும். அதுமட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டின் உணவுப் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும்.இத்தனை மோசமான சட்டங்களையும், சட்ட திருத்தங்களையும் எதிர்த்து விவசாயிகள் - தொழிலாளர்களின் இணைந்த மாபெரும் போராட்டமாக வரும் நவ. 26 பொது வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. நாட்டின் அடிப்படை வர்க்கங்கள் இணைந்து நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவுகள் குவிகின்றன.

அரசுக்குப் புரியும் மொழி
கொரோனா ஊரடங்கு காலத்தில், உ.பி., மாநிலத்தில் மின் வாரியத்தை தனியார் மயப்படுத்த, எதேச்சதிகார ஆட்சி நடத்தும் யோகி ஆதித்யநாத் முயற்சியெடுத்தார். தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்தின் மூலமாக, அந்த முயற்சியிலிருந்து பின் வாங்கியது யோகி அரசு.  அதேபோல, ராணுவ தளவாட தயாரிப்பை தனியார்மயப்படுத்திடும் முயற்சிக்கு எதிராக, வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் இறங்கினார்கள். மத்தியஅரசாங்கம் பணிந்தது. ஆயுள் காப்பீட்டுத்துறை இப்போதும் பொதுத்துறையாக நீடிக்கிறதென்றால், லட்சத்திற்கும் மேற்பட்ட காப்பீட்டு ஊழியர்கள் நடத்திய வீரம் மிக்க போராட்டத்தினால்தான்.

மராட்டியத்தில், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நடைபயணம் தொடங்கிய முதல் நாளில், அன்றைய பாஜக மாநில அரசு அலட்சியமாக இருந்தது. ஆனால், மும்பைநகரத்தில் விவசாயிகள்  நுழைந்தபோது, அமைச்சர்கள் நேரடியாக வந்து, விவசாயிகளை சந்தித்து ஒப்பந்தம் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் கூட 6 லட்சம் சுரங்கத் தொழிலாளர்கள் 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். ஒன்றுபட்ட போராட்டம் மட்டுமே, அரசுக்கு புரியும் ஒரே மொழியாகும். தொழிலாளர்கள் - விவசாயிகளே மக்கள் தொகையில் பெரும்பான்மையினர். அவர்கள் தான் தேசம். அவர்களை பாதுகாக்கும் போராட்டம், தேசப்பற்று மிக்கபோராட்டம். எனவே இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். தேசம் காப்போம்!

===ஜி.ராமகிருஷ்ணன்.===

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)